ஞாயிறு, 7 செப்டம்பர், 2008


திரைப்படங்களிலும்,தொலைக்காட்சியிலும் கவர்ச்சி உடையில் தோன்றி ரசிகர்களை கிறுகிறுக்க வைத்துக் கொண்டிருக்கும் நமீதா என்ற செக்ஸ் புயல், கடந்த 3-ம் தேதி தூத்துக்குடியில் மையம் கொண்டு பொது மேடையில் தோன்றி ரசிகர்களைப் புரட்டி எடுத்தது. ஆயிரக்கணக்கில் திரண்டிருந்த ரசிகர்களை நோக்கி வஞ்சகம் இல்லாமல் பறக்கும் முத்தங்களை அவர் பறக்க விட்டதால் ஆடிப்போனார்கள் ரசிகர்கள்.
நகரச் செயலாளர், மாவட்டச் செயலாளர், தூத்துக்குடி நகர் மன்றத் தலைவர் என்று ஒரு காலத்தில் தூத்துக்குடி அ.தி.மு.க.வில் கொடிகட்டிப் பறந்தவர் இரா.ஹென்றி. இடையில் காங்கிரஸுக்குப் போய் வாழ்க்கையைத் தொலைத்தவர், மீண்டும் அ.தி.மு.க.வுக்கு வந்து புது வாழ்க்கையைப் பெற்றுள்ளார். அந்தத் தெம்பில், தூத்துக்குடியை அடுத்துள்ள முத்தையாபுரத்தில் `ஜெபா ஜுவல்லர்ஸ்' என்ற பெயரில் நகைக் கடை திறந்துள்ளார். அந்தக் கடையைத் திறக்க வந்தபோதுதான் இங்குள்ள ரசிகர்களை ஒரு வழி பண்ணிவிட்டுச் சென்றிருக்கிறார் நமீதா.
அரசியலில் பரபரப்பாகச் செயல்படுவதில் கில்லாடி என்று பெயரெடுத்தவர் ஹென்றி. அவர் நடத்தும் கட்சி நிகழ்ச்சிகளில் கூட வித்தியாசமாக எதையாவது செய்து அசத்துவார். அப்படிப்பட்டவர் அவரது சொந்தக் கடையின் திறப்புவிழா என்றால் மனிதர் சும்மா இருப்பாரா? தூத்துக்குடியில் இருந்து முத்தையாபுரம்வரை நூற்றுக்கணக்கான நமீதாவின் பேனர்களை வைத்து அசத்தியிருந்தார். கலர், கலரான போஸ்டர்களுக்கும் பஞ்சம் இல்லை. `வாராரு வாராரு! நமீதா வாராரு. நகைக்கடையைத் திறந்து வைக்க வாராரு' என்ற பாடல்கள் உள்ளூர் சேனல்களில் வெளுத்து வாங்கிக் கொண்டிருந்தன. இதனால், தூத்துக்குடி மக்கள் மத்தியில் நமீதாவைப் பார்க்கவேண்டும் என்ற ஆர்வம் ஏற்பட்டுவிட்டதை மறுக்க முடியாது.
காலையில் ஒன்பதே முக்காலுக்குத் திறப்பு விழா என்று அறிவிக்கப்பட்டிருந்தது. எனவே, ஒன்பது மணியில் இருந்தே முத்தையாபுரத்தில் குவியத் தொடங்கிவிட்டார்கள் ரசிகர்கள். ஏதோ கோயில் விழாவுக்குப் போவதுபோல தூத்துக்குடியில் உள்ள இளவட்டங்கள் டூ வீலர்களில் முத்தையாபுரத்தை நோக்கிப் படையெடுத்தார்கள். மதுரை வரை விமானத்தில் வந்த நமீதா, காலை பத்து மணிக்கெல்லாம் தூத்துக்குடிக்கு காரில் வந்துவிட்டார். ஆனாலும் கூட்டத்தைக் கூட்டி மக்களிடம் தனது நகைக்கடையை விளம்பரப்படுத்த நினைத்தார்களோ என்னவோ.... `மானாட மயிலாட நமீதா இதோ வந்துவிட்டார்.' `அதோ வந்துவிட்டார்' என்று மைக்கில் சொல்லிக் கொண்டே இருந்தார்கள். மண்டையைப் பிளக்கும் வெயில் சுட்டெரித்துக் கொண்டிருந்தாலும் நமீதாவைப் பார்க்காமல் போவதில்லை என்று ரசிகர்கள் அடம்பிடித்துக் கொண்டிருந்தார்கள்.
தூத்துக்குடி -திருச்செந்தூர் மெயின் ரோட்டில் ஐந்தாயிரத்துக்கும் அதிகமான ரசிகர்கள் திரண்டிருந்ததால், போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதைத் தவிர்க்கமுடியவில்லை. ஒரு டி.எஸ்.பி., மூன்று இன்ஸ்பெக்டர்கள் தலைமையில், ஐம்பதுக்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தார்கள். கட்சி வேறுபாடின்றி அனைத்துக் கட்சிப் பிரமுகர்களையும், வி.ஐ.பி.களையும் கடை திறப்பு விழாவுக்கு அழைத்திருந்தார் ஹென்றி. நமீதா வரும்போது இவர்கள் எங்கே வரப்போகிறார்கள் என்றுதான் எல்லோரும் நினைத்திருந்தார்கள். ஆனால், அனைவரும் தவறாமல் அங்கே ஆஜர் ஆகியிருந்தது ஆச்சர்யம். யாருக்காகவும் காத்திருந்து பழக்கமில்லாத தூத்துக்குடி நாசரேத் திருமண்டல ஆயர் ஜெபச்சந்திரன் கூட நமீதாவுக்காகக் காத்திருந்தார்.
மணி பதினொன்றைத் தொட்டுவிட்டாலும் `வருகிறார்... வருகிறார்' என்று அறிவிக்கப்பட்ட நமீதாவை மட்டும் காணவில்லை. ரோட்டில் பளபளவென்று எந்த கார் வந்தாலும் அதில்தான் நமீதா வருகிறார் என்று நினைத்துக் கொண்டு ரசிகர்கள் விசில் அடித்து ஆரவாரம் செய்தார்கள். ஒரு வழியாக பதினொன்றரை மணிக்கு நான்கைந்து கார்கள் புடைசூழ சும்மா அமைச்சர் ரேஞ்சுக்கு வந்து சேர்ந்தார் நமீதா. கருப்பு கலர் டிரெஸ்ஸும் பெரிய சைஸ் கூலிங் கிளாஸுமாக மேடையேறினார் நமி. பளிச்சென்று இருந்த அவரை நெருங்கிப் பார்க்க ரசிகர்கள் முண்டியடித்ததால் கூட்டத்தைக் கட்டுப்படுத்த போலீஸார் லேசாக லத்தியைச் சுழற்றவேண்டியதாகிவிட்டது. சுற்றிச் சுற்றி வந்து கை காட்டி ரசிகர்களை சந்தோஷப்படுத்தினார். கூட்டத்தில் இருந்த ரசிகர்கள் பறக்கும் முத்தங்களை நமீதாவை நோக்கிப் பறக்கவிட்டார்கள். அதைப் பார்த்து நமீதா கோபப்படுவார் என்று பார்த்தால், பதிலுக்கு ஏராளமான பறக்கும் முத்தங்களைப் பறக்கவிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தினார்.
இதனால் ஆரவாரமான ரசிகர்கள் முண்டியடித்துக் கொண்டு மேடையருகே வந்தார்கள். மீண்டும் லத்தியைச் சுழற்றினார்கள் போலீஸார். அதைப் பார்த்த நமீதா, "போலீஸ்... டோன்ட் பீட் தெம்'' என்று கத்தியவர், அதற்கு தமிழில் என்ன சொல்லணும் என்று உதவியாளர்களிடம் கேட்டுவிட்டு "போலீஸ் ப்ளீஸ்... என் ரசிகர்களை அடிக்காதீங்க. அவங்க எல்லாம் என் செல்லங்கள். என் செல்வங்கள்'' என்று மாறி, மாறிக் குரல் கொடுத்தார். அதைத் தொடர்ந்து பேசிய அவர், "எனக்கு இவ்ளோ ரசிகர்கள் இருக்கிறார்களா என்று தெரியாது. என்னைப் பார்க்க வந்த எல்லோருக்கும் தாங்க்ஸ்'' என்று ஒரு சில வார்த்தைகள் மட்டும் பேசினார். கொடுத்த பணத்துக்கு வஞ்சகம் செய்யாமல் கூட்டத்தை திருப்திப்படுத்துகிறார் என்று நமீதாவின் நடிப்பைப் பார்த்து கூட்டத்தில் இருந்து வந்த கமெண்ட்ஸையும் அப்போது கேட்க முடிந்தது.மேடையில் இருந்த வி.ஐ.பி.க்கள் எல்லோரும் வைத்த கண் வாங்காமல் நமீதாவையே பார்த்துக் கொண்டிருக்க... காவலுக்கு வந்த பெண் போலீஸார் அவருடன் நின்று போட்டோ எடுக்க போட்டி போட்டார்கள். கிட்டத்தட்ட அரைமணி நேரம் இப்படி மேடையில் ஷோ காட்டிய நமி... நகைக்கடைக்குள் புகுந்து முதல் விற்பனையைத் தொடங்கி வைத்ததோடு, ஒரு முக்கால் மணி நேரம் உள்ளே இருந்து வியாபாரம் நடப்பதைப் பார்த்துவிட்டுத் தான் சென்னைக்குப் புறப்பட்டார்.
முன்னதாக நிருபர்களுக்குப் பேட்டி அளித்த அவர், "நான் இதுவரை 25 படங்களில் நடித்திருக்கிறேன். அதில் ஐந்து படங்கள் இன்னும் வெளியே வரவில்லை. ஒரு ஆங்கிலப் படம் எப்போது ரிலீஸ் ஆகும் என்று தெரியாது. எல்லோருக்கும் உள்ளது போலவே எனக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் நடிக்க ஆசை இருக்கு'' என்று வழக்கம் போல பேசியவரிடம், `இப்படி கடைதிறப்பு விழாவுக்காக பணம் பெற்றுக் கொண்டு வந்து ரசிகர்களைச் சந்தித்ததில் திருப்தியா?' என்றோம்.
"நான் இங்கே வந்தது பணத்துக்காகத்தான். ஆனால், இங்கே வந்தபிறகுதான் தெரிகிறது, என் மீது ரசிகர்கள் எவ்வளவு அன்பும், பாசமும் வைத்திருக்கிறார்கள் என்று. இதையெல்லாம் பார்க்கும்போது, பணம் வாங்காமலேயே ரசிகர்களைப் பார்க்க வரலாம் போல தோணுது'' என்று போட்டார் ஒரு போடு. "அவர் சம்பாதித்தது, இப்போது நகைக்கடை வைப்பது என்று எல்லாவற்றிலும் அ.தி.மு.க.வின் பங்கு இருக்கும். ஆனால், அவர் செய்த விளம்பரங்களில் அம்மாவின் படத்தையே போடவில்லை. ம்... அம்மாவையே மறக்கச் செய்யும் அளவுக்கு நமீதா ஆக்கிரமித்துக் கொண்டுவிட்டார் போலிருக்கிறது!'' என்று இதையும் அரசியலாக்கி கிசுகிசுக்கிறார்கள் சில அ.தி.மு.க.வினர்.இது பற்றி நாம் ஹென்றியிடம் கேட்டபோது, ``அரசியல் வேறு. தொழில் வேறு. இதில் போய் அரசியலைக் கலப்பது நாகரிகமாகாது!'' என்றார் அவர்.
எப்படியோ, தூத்துக்குடி அ.தி.மு.க.வில் நமீதாவால் அரசியல் புயல் ஒன்று மையம் கொண்டுவிட்டது என்பது மட்டும் உண்மை.

பவர் கட்டால் நடந்த பாலியல் பலாத்காரம் !!


அதிகாரபூர்வ மின்வெட்டால், இருளில் மூழ்கிக் கிடக்கும் விழுப்புரம் மாவட்டத்தில் விரும்பத்தகாத சம்பவங்கள் தொடர்ந்து நடப்பதன் மூலம் சட்டம் - ஒழுங்குப் பிரச்னை கேள்விக்குறியாகிவிட்டது. பவர்கட்டைப் பயன்படுத்தி சிறுமியைப் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் திண்டிவனம் மக்களைக் கொதிப்படையச் செய்துள்ளது. அதேபோல் மின்வெட்டால் ஆவேசமடைந்த பா.ம.க. எம்.எல்.ஏ. கலிவரதன் ஆட்கள், மின் ஊழியரைத் தாக்கிய சம்பவமும் பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
தமிழகத்தில் அதிகாரபூர்வ மின்வெட்டு அமல் படுத்தப்பட்டிருப்பதால், பொதுமக்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகி வருகின்றனர். நகரப் பகுதியில் இருப்பவர்களாவது பரவாயில்லை. கிராமப்புறத்தில் வசிப்பவர்களின் நிலைமைதான் படுமோசம். மின்வெட்டால் தொழிற்சாலை, வியாபார நிறுவனங்கள், விவசாயம் போன்ற அத்தியாவசியப் பணிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதோடு சட்டம் - ஒழுங்குப் பிரச்னையும் தற்போது தலைதூக்கியுள்ளது.
திண்டிவனம் காவேரிப்பாக்கம் பழனி, சத்யா தம்பதி யரின் மூன்று வயது மகள் லாவண்யாதான் பாலியல் பலாத்காரத்துக்கு ஆளாகி உள்ளாள். கொடூர மனம் படைத்த அந்த கல்நெஞ்சக்காரனைக் கண்டுபிடிப்பதில் காவல் துறையினர் அலட்சியம் காட்டியதால், ஆத்திர மடைந்த பொதுமக்கள் சென்னை - திருச்சி தேசிய நெடுஞ் சாலையில் சாலை மறியல் செய்து தங்கள் எதிர்ப்பைக் காட்டி உள்ளனர்.
நடந்த சம்பவம் குறித்து பழனியைச் சந்தித்துப் பேசினோம். "எனது மகள் லாவண்யா இரண்டு நாட்களுக்கு முன்பு இரவு ஏழு மணிக்கு வீட்டுக்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்தாள். அப்போது திடீரென மின்சாரம் தடைபட்டது. உடனே குழந்தையைத் தேடினோம். அவளைக் காணவில்லை. பவர்கட்டைப் பயன்படுத்தி யாரோ குழந்தையைக் கடத்திச் சென்று விட்டதை அறிந்து அலறியடித்துக் கொண்டு பல இடங்களிலும் தேடினோம். அப்போது ரயில்வே லைன் முட்புதரில் குழந்தை அழும் சத்தம் கேட்டது.. உடனே ஓடிச்சென்று பார்த்தபோது லாவண்யாதான் என்பது புரிந்தது. அவளை திண்டிவனம் மருத்துவமனைக்குத் தூக்கிச்சென்று பார்த்தபோது, அவளது உடம்பில் பல இடங்களில் காயங்கள் இருந்தது தெரியவந்தது. பிறப்புறுப்பிலும் காயம் இருந்தது. பவர்கட்டைப் பயன்படுத்தி யாரோ ஒரு சண்டாளன் இந்தக் கொடூரத்தைச் செய்திருப்பதைத் தெரிந்துகொண்டோம்.
பாதிக்கப்பட்ட குழந்தையைத் தூக்கிக்கொண்டு திண்டிவனம் போலீஸ் ஸ்டேஷனுக்குச் சென்று புகார் கொடுத்தோம். இரவு எட்டு மணிக்கு போலீஸ் ஸ்டேஷன் சென்ற எங்களை பதினொரு மணி வரை `என்ன ஏது?' என்றே போலீஸார் விசாரிக்கவில்லை. போலீஸாரின் அலட்சியத்தை அறிந்த எங்கள் பகுதி மக்கள் கொதித்துப் போய் காவல் நிலையம் முன்பு திரண்டனர். டி.எஸ்.பி. குமார், இன்ஸ்பெக்டர் ராஜன் ஆகியோர் கூட்டத்தினரைப் பார்த்து, `இது ஒரு சாதாரண விஷயம். இதைப் பெரிதுபடுத்த வேண்டாம்' என்று அலட்சியமாகக் கூறி விட்டனர். இந்த வார்த்தையைக் கேட்டு எங்கள் பகுதி மக்கள் டென்ஷன் ஆகிவிட்டனர்.
`இந்தக் காரியத்தைச் செய்த காமுகனைக் கைது செய்ய வேண்டும்' என்று வலியுறுத்தி சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியல் செய்தனர். ஏறக்குறைய இரண்டு மணி நேரம் மறியல் போராட்டம் நடந்தது. இதன் பின் பேச்சுவார்த்தை நடத்திய போலீஸார், `மறுநாள் காலைக்குள் நடவடிக்கை எடுக்கிறோம்' என்று கெஞ்சிக் கேட்டுக்கொண்டதால்தான் போராட்டத்தை வாபஸ் பெற்றோம்'' என்றார் அவர்.இந்தச் சாலை மறியல் நடந்தபோது, அந்த வழியாக சென்னை செல்ல மத்திய சட்டத்துறை இணை அமைச்சர் வேங்கடபதி காரில் வந்தார். மறியலில் சிக்கிக்கொண்ட அவரை போலீஸார் புதுவை கிழக்குக் கடற்கரைச் சாலை வழியாக அனுப்பி வைத்தனர். சாலை மறியலுக்குப் பிறகு குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க போலீஸார் துரிதமாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்நிலையில்தான் பவர்கட் காரணமாக மின் ஊழியர் மீது தாக்குதல் நடந்ததாக பிரச்னை எழுந்திருக்கிறது. முகையூர் தொகுதி பா.ம.க., எம்.எல்.ஏ. கலிவரதனின் சொந்த ஊர் வீரசோழபுரம். அந்த ஊர் மக்கள், `மூன்று நாட்களாக மின்சாரம் இல்லாமல் எந்த வேலையும் நடக்கவில்லை' என்று எம்.எல்.ஏ.விடம் புகார் தெரிவித்தனர். `தொடர் மின்வெட்டுக்குக் காரணம் என்ன?' என்று கேட்க பெரிச்சானூரில் உள்ள துணை மின் நிலையத்துக்கு போன் செய்து பேசியிருக்கிறார் எம்.எல்.ஏ. கலிவரதன். அப்போது பணியில் இருந்த லைன் இன்ஸ்பெக்டர் தனகோட்டிக்கும் எம்.எல்.ஏ.வுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்தச் சம்பவத்துக்குப் பிறகுதான் அந்த ஊழியரை எம்.எல்.ஏ.வின் ஆதரவாளர்கள் தாக்கியுள்ளனர்.
மின் ஊழியர் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக எம்.எல்.ஏ. கலிவரதனிடம் கேட்டோம். "வீரசோழபுரம் பகுதி விவசாயிகள் தொடர்ந்து மின்வெட்டு ஏற்படுவதாக என்னிடம் புகார் தெரிவித்தனர். இதனால் நான் மின்வாரிய அலுவலகத்துக்குத் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பேசினேன். சம்பந்தப்பட்ட ஊழியர் முறையான பதிலைக் கூறவில்லை. நான் பேசிக்கொண்டே இருக்கும் போது லைனைத் துண்டித்து விட்டார். இது சம்பந்தமாக அவரை நேரில் சந்தித்துக் கேட்டபோது, `நான்தான் அன்று தொலைபேசியில் பேசினேன். அதற்கு என்ன இப்போது? என்று மரியாதை இல்லாமல் ஒருமையில் பேசினார்.
`இதைப் பெரிதுபடுத்தாதீர்கள். இவரை மன்னித்து விடுங்கள்' என்று அங்கிருந்த அதிகாரி கூறியதால்தான் நான் அங்கிருந்து வந்துவிட்டேன். ஆனால், இந்தச் சம்பவத்தை தி.மு.க.வினர் அரசியல் ஆக்கி விட்டனர். `பா.ம.க. எம்.எல்.ஏ. மற்றும் அவரது கட்சிக்காரர்கள் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும்' என்று காவல் நிலையத்துக்கே சென்று வற்புறுத்தி உள்ளனர். மக்கள் பிரச்னையைக் கேட்கச் சென்ற எங்கள் மீது பொய் வழக்குப் போட்டுள்ளனர். இது அமைச்சர் பொன்முடி தூண்டுதலின் பேரில்தான் நடந்திருக்கிறது.
`ஊழியர் குடிபோதையில் இருந்தார்' என்று நானும் புகார் கொடுத்தேன். ஆனால், அந்தப் புகார் மீது நடவடிக்கை எடுக்காமல், எங்கள் கட்சிப் பிரமுகர் சுபாஷை போலீஸார் கைது செய்தனர். இதனால்தான் எங்கள் கட்சிக்காரர்கள் அரகண்டநல்லூர் போலீஸ் ஸ்டேஷனை முற்றுகையிட்டனர். நடந்த சம்பவம் குறித்து விழுப்புரம் மாவட்ட எஸ்.பி. அமல்ராஜிடமும் புகார் சொல்லியிருக்கிறேன். ஆனால் சம்பந்தப்பட்ட ஊழியரை இன்னும் சஸ்பெண்ட் செய்யவில்லை. எனது புகார் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் டி.எஸ்.பி. அலுவலகத்தை முற்றுகையிட்டு நியாயம் கேட்போம்'' என்று ஆவேசமாகக் கூறினார் அவர்

ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளான முன்னாள் அமைச்சர் செல்வகணபதி கழகத்தில் சேர்ந்தது பற்றி?'' என்ற ஒரு கேள்விக்கு, ``நாளைக்கு ஜெயலலிதாவையே கூட சேர்த்துக் கொள்ள நேரிடலாம், என்ன செய்வது?'' என்று கருணாநிதி பதில் தர, தமிழகம் கொஞ்சம் அதிர்ந்து போனதென்னவோ உண்மை.
எதிர்பார்த்ததுபோலவே இந்த அதிரடிக்கு ஓர் எதிரடி பதில் அ.தி.மு.க. தரப்பிடம் இருந்து எகிறிக் குதித்தது. கலைஞரின் அந்தக் கருத்துக்கு பதில் அளித்த ஜெயலலிதா, ``கருணாநிதியும், கருணாநிதி குடும்பத்தினரும் தங்களை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் சேர்த்துக் கொள்ளுங்கள் என்று என்னிடம் வந்து கேட்கின்ற காலம் விரைவில் வருமே தவிர, நான் அங்கு போய்ச் சேரக்கூடிய காலம் நிச்சயமாக வரவே வராது'' என்று ஒரு போடு போட்டார்.
இந்நிலையில்தான் நமது `குமுதம் ரிப்போர்ட்டர்' இதழுக்கு இன்னொரு ஆச்சரியம் காத்திருந்தது. ```நாளைக்கு ஜெயலலிதாவே தி.மு.க.வுக்கு வந்தாலும் கூட அவரைச் சேர்த்துக் கொள்வோம்' என்ற ரீதியில் கலைஞர் சொன்னது வெறும் பேச்சல்ல. அப்படி ஜெயலலிதாவே தி.மு.க.வில் சேரப்போன ஒரு சம்பவம் கூட முன்பு நடந்தது. நம்புவதற்கு ரொம்பக் கடினமாக இருந்தாலும் அப்படி ஒரு சம்பவம் நடந்தது முக்காலும் உண்மை'' என்று சொல்லி நம் நாடிநரம்புகளை ஆடவைத்து விட்டார் ஒரு பிரபல பத்திரிகையாளர்.
அவர் `அசைட் பாஸ்கர்'!அவர் சொன்ன தகவல்கள் தமிழக அரசியலையே ஆடி அதிர வைக்கக் கூடியவை. அவர் நம்மிடம் சொன்ன தகவல்களை விழிகளை விரித்தபடி கேட்டுக்கொண்டு நாம் உள்ளே விழுங்கினோம். அசைட் பாஸ்கர், கலைஞருக்குத் தூரத்து உறவுக்காரர் என்பதுடன், அ.தி.மு.க.வில், `நாளிதழின் பெயர் கொண்ட நபருக்கு' அவர் வகுப்புத் தோழர். அத்துடன் அந்தக் கட்சியின் பெரும்புள்ளியான நர்த்தனக் கடவுளின் பெயர் கொண்ட ஒருவருக்கும் அவர் மிகமிக நெருக்கமானவர். அந்த சம்பவத்தை அசைட் பாஸ்கர் நம்மிடம் விவரிக்கத் தொடங்கினார்.
``எம்.ஜி.ஆர். மறைவுக்குப் பின் ஜானகி அணி என்றும், ஜெயலலிதா அணி என்றும் அ.தி.மு.க. பிரிந்து கிடந்த நேரம் அது. ஜானகி அணியினர் கலைஞரிடம் அவர்களது அணிக்கு ஆதரவு கேட்டிருக்க, கலைஞர் அதுபற்றி யோசித்து முடிவு எடுப்பதாகச் சொல்லியிருந்தார்.அந்த நேரத்தில் அரசு அதிகாரியாக இருந்த எனக்கு நெருக்கமான அந்த `நர்த்தனக் கடவுள்' அல்சர் காரணமாக மயிலாப்பூரில், கண்ணனின் தாயார் பெயர் கொண்ட மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்ந்திருந்தார். அவரை நான் பார்க்கப் போயிருந்தேன். என்னிடம் `முக்கிய விஷயம் ஒன்றைப் பேச வேண்டும்!' என்று பரபரத்த நர்த்தனக் கடவுள், `உனக்கு விஷயம் தெரியுமா? நாளைக் காலை 9 மணிக்கு ஜெயலலிதா கோபாலபுரத்துக்குச் சென்று கலைஞர் முன்னிலையில் தி.மு.க.வில் சேர முடிவு செய்து விட்டார்!!! ஒட்டுமொத்த ஜெ. அணியும் தி.மு.க.வுடன் இணையும் முடிவில் இருக்கிறது' என்றார். என்னால் என் காதுகளையே நம்ப முடியவில்லை.
`இது எப்படி நடக்கும்?' என்று நம்பமுடியாமல் கேட்டேன் நான். அதோடு, `இது தற்கொலை முயற்சி அல்லவா?' என்ற வார்த்தையும் என் வாயில் இருந்து தவறி விழுந்தது.
`இல்லை. ஜானகி அணியினருக்கு காங்கிரஸ் கட்சி ஆதரவு தருவது பற்றி டெல்லியில் ராஜீவ் காந்தியுடன் மூப்பனார் தீவிர பேச்சுவார்த்தையில் இருக்கிறார். ஜானகி அணிக்கு காங்கிரஸ் ஆதரவு கிடைக்கப்போவது உறுதி. பேருக்கு ஜானகியை முதலில் ஆட்சியில் அமர உதவி செய்து விட்டு, அதன்பின் அவரை சுலபமாக வீழ்த்தி தமிழகத்தில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சியை ஏற்படுத்துவதுதான் கதர்க் கட்சியினரின் உள்நோக்கம். அதை நாம் அனுமதிக்க முடியாது.
தமிழகத்தை ஏதாவது ஒரு திராவிடக் கட்சிதான் ஆள வேண்டும். காங்கிரஸ் இங்கே மீண்டும் ஆட்சிக்கு வந்தால் ஆந்திரம், கர்நாடகம் போல தமிழகம் மீண்டும் பின்னுக்குப் போய்விடும். ஜானகி அணியின் முதுகில் குத்த காங்கிரஸ்காரர்கள் முயற்சிக்கிறார்கள். அதனால் தான் ஜெயலலிதா இப்படியொரு முடிவை எடுக்க விரும்புகிறார். அத்துடன் என் விருப்பமும் அதுதான்' என்று நிறுத்தினார் நர்த்தனக் கடவுள். நான் திகைத்துப் போனேன்.
அதன்பின் அவர் என்னை நோக்கி,`ஜெயலலிதா தி.மு.க.வில் சேரப்போவது தொடர்பாக உன் உதவியும் தேவைப்படுகிறது. உனக்கு முரசொலி மாறனை நன்றாகத் தெரியும் அல்லவா?' என்றார். குத்துகிற ஒரு கருவியின் பெயர் கொண்ட ஒரு மூத்த பத்திரிகையாளர் மூலம் முரசொலி மாறனை எனக்கு ஏற்கெனவே தெரியும். எனவே நான் மௌனமாக இருந்தேன்.
`நீ இப்போதே வெளியில் போய் முரசொலி மாறனுக்கு போன் செய்து, ஜெயலலிதா நாளை தி.மு.க.வில் சேரப்போவதைப் பற்றி அவரிடம் சொல்லி, அவரது ரியாக்ஷன் என்ன என்று கேளு. கேட்டு வந்து என்னிடம் சொல்லு. மிகவும் அவசரம்' என்றார் ந.க.
அப்போது செல்போன்கள் இல்லாத காலம். நான் ஆஸ்பத்திரிக்கு வெளியில் வந்து அங்கிருந்த எஸ்.டி.டி. பூத் ஒன்றில் இருந்து மாறனுக்கு போன் செய்தேன். அவர் லைனில் வந்தார். `ஜெயலலிதா தி.மு.க.வில் சேர முடிவெடுத்திருக்கும் தகவலை முரசொலி மாறனிடம் சொன்னதும் அவர் அப்படியே திகைத்து திக்குமுக்காடிப் போய்விடுவார். உடனே அதை வரவேற்பார்' என்று நான் நினைத்தேன்.
ஆனால், நான் இந்த அதிரடித் தகவலைக் கூறியதும் எதிர்முனையில் இருந்த முரசொலி மாறன் துளிகூட அதிர்ச்சி அடையவில்லை. நிறுத்தி நிதானமாக `அப்படியா?' என்று கேட்டுக் கொண்ட அவர், `ஜெயலலிதா தி.மு.க.வில் சேர விரும்புவது பற்றி நீ என்ன நினைக்கிறாய்?' என்று என்னிடம் கேட்டார். `எனக்கு அந்த அளவுக்கு அரசியல் அறிவு இல்லை' என்றேன்.
உடனே முரசொலி மாறன், `அந்த அம்மா தி.மு.க.வுக்கு வந்தால் அவரை ஹேண்டில் பண்ணுவது ரொம்ப சிரமம். எம்.ஜி.ஆரால் கூட முடியாத காரியம் அது. அதோடு ஜெயலலிதா தி.மு.க.வுக்கு வந்தால் கட்சியின் கட்டுக்கோப்பைத் தகர்த்து விடுவார். அது மட்டுமல்ல. அவர் எப்போதும் எந்த விஷயத்திலும் உறுதியாக இருக்க மாட்டார். இப்போதுகூட பாரேன். நாளை காலை 9 மணிக்கு தி.மு.க.வில் சேரும் முடிவில் கூட ஜெயலலிதா உறுதியாக இருக்க மாட்டார்' என்றவர், `ஜெயலலிதா இப்படி திடீர் முடிவு எடுக்க என்ன காரணம்?' என்று என்னிடம் கேட்டார்.நான், `ஜானகி அணி, காங்கிரஸிடம் ஆதரவு கேட்கும் விஷயம், ராஜீவ் காந்தியுடன் மூப்பனார் பேசிய விஷயம்' போன்றவற்றை விளக்கினேன். அதைக் கேட்டு முரசொலி மாறன் சிரித்துக் கொண்டே, `டெல்லியில் இருந்து உடனுக்குடன் தகவல்கள் பெறுவதில் உன் நர்த்தனக் கடவுள் ஒரு மணிநேரம் லேட்டாக இருக்கிறார். ஜானகி அணிக்கு ஆதரவு தருவதில்லை. இந்த விஷயத்தில் நியூட்ரலாக இருப்பது என்று காங்கிரஸ் மேலிடம் முடிவெடுத்து ஒரு மணிநேரத்துக்கு மேல் ஆகிறது' என்றார்.
நான் திகைத்து நின்றபோது அவர், `ஜெயலலிதா தி.மு.க.வில் சேர விரும்புவதாகச் சொன்னாயே. கலைஞர் இப்போது தூங்கப் போயிருப்பார். அதனால் அவருக்கு இந்தத் தகவலைச் சொல்ல முடியாது. காலையில் அந்த அம்மா (ஜெயலலிதா) தி.மு.க.வில் சேரும் முடிவில் உறுதியாக இருந்தால் காலையில் எனக்கு போன் செய். ஆனால் அந்த அம்மாவின் மனம் நாளைக் காலைக்குள் கண்டிப்பாக மாறிவிடும்' என்றுகூறி போன் தொடர்பைத் துண்டித்துக் கொண்டார்.
நான் ஆஸ்பத்திரியில் படுத்திருந்த நர்த்தனக் கடவுளிடம் திரும்பி வந்தேன். ஆனால் முரசொலி மாறனுடன் நான் பேசிய எல்லா விஷயங்களையும் அவரிடம் நான் சொல்லவில்லை. அப்போது டெல்லியில் இருந்து நர்த்தனக் கடவுளுக்கு ஒரு போன் வந்தது. அதில் `காங்கிரஸ் தலைமை ஜானகி அணியை ஆதரிக்கப் போவதில்லை' என்ற தகவல் வரவே அவர், `நல்ல தகவல்தான். காங்கிரஸார் நடுநிலை வகிக்க முடிவு செய்திருப்பதால் இனிமேல் ஜெயலலிதா தி.மு.க.வில் சேர வேண்டியதில்லை. தேர்தல் வந்தால் அது நம் அணிக்குத்தான் வாய்ப்பு. ஜானகி அணியில் வெறும் தலைவர்கள் மட்டும்தான் இருக்கிறார்கள்' என்று முடித்துக் கொண்டார். இரவில் ஆஸ்பத்திரியிலேயே அவருடன் என்னைத் தங்கிவிட்டுப் போகச் சொன்னார். நானும் அதுபோல அங்கே தங்கி விட்டுச் சென்றேன். காலையில் நான் முரசொலி மாறனுக்கு போன் செய்ய வேண்டிய நிலை ஏற்படவில்லை. அவரும் எனக்கு போன் செய்து `என்ன சூழ்நிலை?' என்று கடைசிவரை கேட்க வில்லை. ஜெயலலிதா தி.மு.க.வில் சேர இருந்த சூழ்நிலை பற்றி மாறன் கலைஞருக்குத் தகவல் தெரிவித்தாரா? என்பது பற்றியும் எனக்குத் தெரியாது.
எனவே, ஜெயலலிதா தி.மு.க.வில் சேர இருப்பது பற்றி அப்போது கலைஞர் என்ன நினைத்தார் என்பது பற்றியும் நம்மால் தெரிந்து கொள்ள முடியவில்லை'' என்று முடித்துக் கொண்டார் அசைட் பாஸ்கர்.
ஜெயலலிதா தி.மு.க.வில் சேர முயன்றார் என்ற இந்தத் தகவல் தமிழக அரசியலில் இன்னொரு ரவுண்ட் அதிரடியைக் கிளப்பாமல் இருந்தால் சரிதான்! ஸீ