ஞாயிறு, 15 பிப்ரவரி, 2009

இசையும் ஆத்மாவும் ஒன்றென கலந்திடின் ....



இளையராஜா.... மயிலிறகின் மென்மைக்கும், தொட்டு செல்கின்ற காலை தென்றலின் குளுமைக்கும் அர்த்தம் கற்ப்பிக்கும் ஒரு மந்திர சொல் இளையராஜா . இசையின் மூலம் மனித வாழ்கையின் சுகம்,துக்கம்,உறவு,யதார்த்தம் என சகலத்தையும் வெளி கொணர்ந்தவர் இளையராஜா.



தமிழ் சினிமாவை இளையராஜா என்ற அலகு இல்லாமல் அளந்தால் அங்கு வெறும் அர்த்தமற்ற வெற்றிடமே மிஞ்சும்.இளையராஜா ஒரு சகாப்தம் அதை வெறும் வார்த்தைகளால் அடக்கிட முடியாது.



தற்பொழுது வெளிவந்த நான் கடவுள் படத்தில் இடம் பெற்ற ஓம் சிவ ஓம் பாடலின் வெப்பம் இன்னும் அடங்கிய பாடில்லை.இளையராஜா உள்ளுக்குள் இசையின் மூலமாக ஒரு ருத்ர தாண்டவமே ஆடியிருக்கிறார் .உள்ளுக்குள் ஒவ்வொரு அணுவும் அந்த தாண்டவத்தை அனுபவிக்கிறது எனலாம். இந்த பாடலை கேட்ட ஒரு வட இந்திய சாது கண்ணிற் விட்டு அழுததாக கூறுவது உண்மை மட்டுமில்லை அது கண்ணிற் அல்ல ஆன்மாவின் வெளிப்பாடு என்பதே உண்மை!!



சிம்பொனி, திருவாசகம் என இசையின் பரிமாணங்களை தனது ஒப்பற்ற ஆத்ம அறிவால் கொண்டு வந்தவர் இளையராஜா.ஆத்மாவை தொட்டு வெளி கொணர்ந்தவர்க்கு ஆஸ்ஸ்கர் விருது ஒன்றும் தேவை இல்லை.



கிராமத்து வாழ்கையின் யதார்த்தத்தை ,இயற்கையின் இனிய அழகை தனது இசையால் அள்ளி வழங்கிய காமதேனு இளையராஜா.

இசையோடு வாழ்ந்து,இசையையே தெய்வமாய், காணுகின்ற சகலத்திலும் இசையை காணுகின்ற ஒரு மாபெரும் இசை கலைஞரை வெறும் இசை ஞானி என்பது எல்லைகளை சுருக்குவது போன்றதுதான்.




எப்பொழுது ஒரு இசை கலைஞன் தன்னுடைய இசையினால் புலன்களை தாண்டி ஊடுருவி உள்ளுக்குள் சென்று ஆத்மாவை தீண்டி அதனை வெளி கொணர்கிரானோ அப்போதே அவன் ஆத்ம ஞானியாக மாறிவிடுகிறான்.இளையராஜா இசை ஞானி மட்டுமல்ல அவர் ஒரு ஆத்ம ஞானியும் கூட.
இசையும் ஆத்மாவும் ஒன்றென கலந்திடின் அதன் பெயர் இளையராஜா !!.இன்னும் பல யுகங்கள் கழிந்தாலும் இசையின் ஊடே இளையராஜா இந்த நில உலகின் சரித்திரத்தில் இருப்பார்
இந்த சிறிய பதிவு இளையராஜாவின் ஆயிரக்கணக்கான இசை வெளிப்பாடுகளுக்கு ஒரு மிக சிறிய அர்ப்பணம் . வாழ்க இசை ஞானி பல்லாண்டு !!