புதன், 17 செப்டம்பர், 2008

இளைஞ்சரை காவு வாங்கிய சிம்புவின் கார் !!

கம்பன் வீட்டுக் கட்டுத்தறியும் கவிபாடும்' என்பதெல்லாம் அந்தக்கால பழமொழி. `சிம்பு வீட்டு கார் கூட சிக்கலில் சிக்கும்!' என்பதுதான் லேட்டஸ்ட் மொழி.
காஞ்சிபுரம் மாவட்டம், சாலவாக்கம் அருகே ஒருவரை குதறிக் கொன்றுவிட்டு, இருவரைப் படுகாயப்படுத்தி விட்டுக் கிடைத்திருக்கிறது சிம்புவின் கார். அந்த உயிர்ப்பலி நடந்தபோது காரை ஓட்டியவர் யார் என்பதுதான் இந்த நிமிடம் வரை சர்ச்சையாகிக் கொண்டிருக்கும் கேள்வி.

அகதா கிறிஸ்டியின் மர்ம நாவல்களில் கூட இந்த அளவு திடீர்த் திருப்பங்கள் இருக்காது. அந்த அளவு மர்மங்களைத் தன்னுள் அடக்கி, அனைவரையும் பொறி கலங்க வைத்திருக்கிறது சிம்புவின் கார் சம்பவம். இது பற்றி நாம் இறங்கி விசாரிக்க ஆரம்பித்தோம்.

செப்டம்பர் 10-ம்தேதி நள்ளிரவு! சென்னை மவுண்ட்ரோடு, ஆனந்த் தியேட்டர் அருகே உள்ள கிராண்ட் ஓரியண்ட் ஹோட்டலுக்கு நடிகர் சிம்புவும், அவரது தம்பி குறளரசன் மற்றும் நண்பர்கள் ஜமாவும் சென்றதாகக் கேள்வி. விருந்து வைபவம் முடிந்தபின்னர் இவர்கள் வெளியே வந்து பார்த்தபோது சிம்புவின் கருப்பு நிற மாண்டியோ (டி.என்.09-ஏபி 4466) காரைக் காணவில்லையாம்.

டிரைவரும் அங்கே இல்லாததால் உடனே எண் 100-க்கு போன் செய்து, `காரைக் காணவில்லை' என்று சிம்பு புகார் செய்ததாகத் தகவல். அதையடுத்து காரைத் தேடி களமிறங்கினார்கள் போலீஸார். அதில் எந்தப் பலனும் கிடைக்கவில்லை.

மறுநாள் (11-ம்தேதி) தியாகராயர் நகரில் உள்ள சிம்புவின் வீட்டுக்கு ஆயிரம் விளக்கு போலீஸார் போய் விசாரித்திருக்கிறார்கள். ஹோட்டல் வாசலில் நின்ற காரை சிம்புவின் வீட்டிலுள்ளவர்கள்தான் வீட்டுக்கு வரவழைத்ததாக ஒரு விவரம் தெரியவர, பிரச்னை ஓய்ந்தது என்று திரும்பிவிட்டனர் போலீஸார்.

இதற்கிடையே, அதே நாளில் ஆயிரம் விளக்கு காவல் நிலையத்துக்குச் சென்ற சிம்புவின் தந்தை விஜய டி.ராஜேந்தர், `எனது இளைய மகன் குறளரசன் விருந்துக்குச் சென்றபோது காரைக் காணவில்லை. அதன் டிரைவர் வசந்தகுமாரையும் காணவில்லை' என்று புகார் கொடுத்துள்ளார். ஒரே குடும்பத்திலிருந்து இப்படி முன்னுக்குப் பின் முரணாக வந்த தகவல்களால் தலை சுற்றிப் போனார்கள் போலீஸார்.

இந்தநிலையில் யாரும் எதிர்பாராத விதமாக, காஞ்சிபுரம் மாவட்டம், சாலவாக்கம் அருகே சிம்புவின் கார் சேதமாகி நிற்பதாக ஒரு தகவல் போலீஸுக்குக் கிடைத்தது. சம்பவ இடத்துக்கு போலீஸார் சென்றபோது மற்றொரு அதிர்ச்சித் தகவல் அவர்களுக்காகக் காத்திருந்தது. சிம்புவின் கார் மோதியதில் மோட்டார் பைக்கில் சென்ற ஒருவர் இறந்ததுடன், இரண்டு பேர் படுகாயம் அடைந்து விட்டார்கள் என்பதுதான் அந்த அதிர்ச்சித் தகவல். டிரைவர் வசந்தகுமார்தான் குடிபோதையில் காரை கடத்திச் சென்று இந்த விபத்தை ஏற்படுத்தியிருக்க வேண்டும் என்று சந்தேகித்தனர் போலீஸார்.

இதற்கிடையே இன்னொரு சந்தேகமும் போலீஸாரிடம் சதிராட ஆரம்பித்தது. விபத்து நடந்தபோது அந்த காரை வசந்தகுமார்தான் ஓட்டிச் சென்றாரா? என்பதுதான் அந்த சந்தேகம்.

நடிகர் சல்மான்கான் ஸ்டைலில் அந்த வண்டியை யாரும் ஓட்டிச்சென்றார்களா? அல்லது வழக்கமாக தமிழ் சினிமாக்களில் வருவது போல், விபத்தைத் தான் ஏற்படுத்திவிட்டு பழியை டிரைவர் மீது யாரும் போடுகிறார்களா? என்பது போன்ற சந்தேகங்களும் போலீஸாரைக் குத்திக் குடையத் தொடங்கின. இதுபற்றி விசாரிக்க ஆரம்பித்திருக்கிறார்கள் போலீஸார்.

டிரைவர் வசந்தகுமார் இதுவரை சிக்காத நிலையில், அவர் பிடிபட்டால்தான் பல பின்னணிகள் வெளியில் வர வாய்ப்புள்ளது.

சிம்புவின் கார் சம்பவத்தின் பின்னணியில் பலப்பல ஊகங்களுக்கு இடமிருக்கின்றன. சிம்புவோ அல்லது குறளரசனோதான் சம்பவத்தின்போது அந்த காரை ஓட்டியதாகக் கூறப்படுவது விஜய டி.ராஜேந்தர் தரப்புக்குப் பெரும் எரிச்சலை ஏற்படுத்தியிருக்கிறது.

இந்த கார் சம்பவத்தைக் காரணம் காட்டி, சிம்பு மீது வீண்பழி சுமத்தி அவரது இமேஜை `காலி' செய்ய இளம் நடிகர் ஒருவரின் தந்தை செய்யும் முயற்சி என்கிறார்கள் சிம்புவின் தரப்பினர்.

மதுரையில் தனக்குச் சொந்தமான வீட்டில் இருந்த மரச்சாமான்களைத் திருடி விற்க முயன்றதாக, தனது லட்சிய தி.மு.க. கட்சியின் மாவட்டச் செயலாளர் பரமன் மீதே புகார் கூறினார் விஜய டி.ராஜேந்தர். ஆனால் பரமன் தரப்புத் தகவலோ வேறுமாதிரியாக இருந்தது. `தான் பல கோடி ரூபாய் மதிப்பில் டி.ஆருக்கு நிலம் வாங்கிக் கொடுத்த வகையில் தனக்குச் சேரவேண்டிய கமிஷன் தொகை ஒன்றரை லட்ச ரூபாயைத் தராமல் டி.ஆர். ஏமாற்றி விட்டார்' என்று குற்றம் சாட்டினார் பரமன்.

அதோடு டி.ஆர். மீது சென்னை, உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரவும் செய்தார். பின்னர் அந்த வழக்கு தள்ளுபடியானது வேறு விஷயம். எனவே சிம்புவின் கார் கடத்தல், ஏற்பட்ட விபத்து, அதனால் உருவான உயிரிழப்பு இவை வேண்டுமென்றே செய்யப்பட்ட வேலையாக இருக்குமோ? இதன் பின்னணியில் டி.ஆருக்குப் பிடிக்காதவர்கள் யாராவது இருந்திருக்கலாமோ? என்ற சந்தேகமும் டி.ஆர். தரப்புக்கு உள்ளது.

இதற்கு நேர் எதிராக இந்த கார் விபத்து சம்பவத்தில் இருந்து தனது மகன்களைக் காப்பாற்றவே டி.ஆர். இப்படி ஒரு நாடகத்தை அரங்கேற்றியிருக்கிறார் என்ற கிசுகிசுப்பும் கில்லி விளையாடுகிறது.

`ஆளும் கட்சிக்கு எதிராக டி.ஆர். அவ்வப்போது மேடைகளில் அவிழ்த்துவிடும் அடுக்குமொழி வசனங்களை ஆஃப் செய்வதற்காக இது திட்டமிட்டு அவருக்காக உருவாக்கப்பட்ட சிக்கல்' என்ற ஊகமும் ஒருசிலரிடம் உள்ளது.

சிம்புவின் கார் சம்பவம் பற்றி டி.ரஜேந்தரிடம் பேசினோம். கடும்கோபத்தில் இருந்த அவர் நம்மிடம் பொரிந்து தள்ளிவிட்டார்.

``சிலம்பாட்டம் ஷூட்டிங்கிற்காக சிம்பு கடந்த மூன்றாம் தேதியே கொழும்புக்குப் போய் விட்டான். கார் தொலைந்து போன அன்று எனது இளைய மகன் குறளரசன்தான் அவனது நண்பர்களுடன் அந்த ஹோட்டலுக்குச் சென்றிருந்தான். விருந்து முடிந்து வெளியில் வந்தபோது காரையும் டிரைவரையும் காணவில்லை என்று அங்கிருந்தே என்னிடம் போனில் சொன்னான். அதன்பின்னர், அவன் ஆட்டோவில் வீடு வந்து சேர்ந்தான். அப்போது நள்ளிரவு நேரம் என்பதால் மறுநாள் காலை வரை காத்திருந்த நான், அன்று ஆயிரம் விளக்கு போலீஸில் காரைக் காணவில்லை என்று புகார் கொடுத்தேன்.

போலீஸ் விசாரணையில், எனது காரை டிரைவர் வசந்தகுமார் கடத்திச் சென்றபோது காஞ்சிபுரம் மாவட்டம் சாலவாக்கம் அருகே அது விபத்துக்குள்ளாகி நிற்பது தெரிய வந்தது. ஆனால் வசந்தகுமாரைப் பிடிக்க முடியவில்லை. சிம்புவின் வளர்ச்சியைப் பிடிக்காத ஒரு கூட்டம்தான் சதி செய்து, அவனைப் பற்றி மீடியாக்களுக்குத் தவறான செய்திகளைப் பரப்பி வருகின்றது. மவுண்ட் ரோடில் உள்ள அந்த மாதிரி சிறிய ஹோட்டலுக்கெல்லாம்(!) சிம்பு செல்ல மாட்டான்.

ஏற்கெனவே நடிகை நயன்தாரா விஷயத்தில் அந்த நடிகை குனிந்தால், நிமிர்ந்தால், ஏன் அவர் பாத்ரூமில் வழுக்கி விழுந்தால் கூட சிம்புதான் எண்ணெய் ஊற்றி வழுக்கி விழ வைத்தார் என்று சிலர் வதந்தி பரப்பி வந்தார்கள். இப்போது கார் விஷயத்திலும் இதுபோல கட்டுக்கதைகளை அவிழ்த்து விடுகிறார்கள்.

என் மகனைப் பற்றி தவறான செய்தியை வெளியிட்ட பத்திரிகைகள் மீது வழக்குத் தொடரப்போகிறேன்'' என்றார் அவர்.
காஞ்சிபுரம் எஸ்.பி. பெரியய்யாவிடம் கேட்டதற்கு, ``சிம்புவின் கார் டிரைவர் வீடு அரும்பாக்கத்தில் உள்ளது. ஓட்டலில் இருந்து அவர் காரை எடுத்துக் கொண்டு சிம்பு வீட்டிற்குச் செல்லாமல் அவரது வீட்டிற்குச் சென்றுள்ளார்.

மறுநாள், செங்கல்பட்டு வந்து அவரது நண்பர்களை அழைத்துக் கொண்டு ஜாலியாக உத்திரமேரூருக்குச் சென்றுள்ளார். பின்னர் சென்னை திரும்பும் வழியில்தான் விபத்து நடந்துள்ளது. இதனால், டிரைவர் தப்பி ஓடிவிட்டார். டிரைவருடன் வந்தவர்களை அழைத்து விசாரித்தபோதுதான் இந்தத் தகவல்களைத் தெரிவித்தனர். விபத்தில் காயம்அடைந்த இருவரும் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிசிச்சை பெற்று வருகின்றனர்!'' என்றார்.

சிம்பு தொடர்புடைய இந்த கார் சம்பவம் இன்னும் என்னென்ன திடீர் திருப்பங்களை ஏற்படுத்தப் போகிறதோ தெரியவில்லை.

3 கருத்துகள்:

யூர்கன் க்ருகியர் சொன்னது…

"சிம்பு"-வா இருந்தாலும் சரி "சொம்பு"-வா இருந்தாலும் சரி,குற்றவாளிக்கு கடுமையான தண்டனை கிடைக்கணும்.

பெயரில்லா சொன்னது…

Appanukum makanumkum varavalaya ella..

ada world la erukura,, tamilan la 10per LDMK ku odu poduvana? deaa TR ru, unnoda family la unnaku oru odu viluma?

summa sound vidatha apram
namma karithi amma thokuthila ninnan, but deposit kuda kidailala...



summa DMK kuda sallra adi... polachiku va..

vina vijayakanth kuda mothatha.. incase CM aeida... unnaku apputha..


Apparam nama, PAAMAAKAA ramthas kuda poei saru atlaest unnaku oru naram sapadu vankitharuvaru...

enni TR ru Simbu nu news paper la vanthaa..

sathiya yarum padikavandam

ராஜ்குமார் சொன்னது…

உங்கள் கருத்திற்கு நன்றி ஜூர்கனே & ஆர்.ஜி.பி குவைத்