ஞாயிறு, 14 செப்டம்பர், 2008

கலைஞருக்கே செக் வைத்த மாறன் பிரதர்ஸ் !!!!


ஒரு கேலிச்சித்திரம் இந்த அளவுக்கா வேலை செய்யும்? என்ற கேள்வியைக் கிளப்பிவிட்டிருக்கிறது தினமலர் வெளியிட்ட ஒரு கார்ட்டூன். அதன் வேலூர் பதிப்பில் வெளியான அந்தக் கார்ட்டூனைக் கண்டித்து இஸ்லாமிய அமைப்புகள் கச்சைகட்ட, அவர்களுடன் இணக்கமாகப் பேசி ஒரு சமரசத்துக்கு வந்தது தினமலர். ``இதன்பிறகும் சன் டி.வி. தேவையில்லாமல் அந்த ஆர்ப்பாட்டச் செய்தியை மீண்டும் மீண்டும் ஒளிபரப்பியது தவறு'' என்று தினமலர் குரல் கொடுக்க, அதன்பின்தான் பிரச்னை உண்மையாகவே ஆரம்பமானது.
இதற்குமுன் பலமுறை தினமலர் ஆர்.கிருஷ்ணமூர்த்தி முதல்வரைச் சந்திக்க நேரம் கேட்டிருந்தும் அவருக்கு அந்த வாய்ப்புக் கிடைக்கவில்லை. இந்த நிலையில், மேற்படி புகார் தொடர்பாக முதல்வரைச் சந்திக்க கிருஷ்ணமூர்த்தி விரும்பியபோது, முதல்வர் போன் மூலம் அவருடன் உடனே உரையாடியிருக்கிறார். அப்போது சன் டி.வி. மற்றும் சில நாளிதழ்கள் மீது லேசான வருத்தத்துடன் முதல்வரிடம் கருத்து தெரிவித்தாராம் கிருஷ்ணமூர்த்தி.
இதில் முழுவதுமாக விஷயத்தைக் கிரகித்துக் கொண்ட முதல்வர், இது தொடர்பாக எழுத்துப்பூர்வமாக ஒரு புகார் மனுவைத் தரும்படி சொல்லியிருக்கிறார். தினமலர் தரப்பு இதில் தயக்கம் காட்டிய நிலையில், உள்துறை உயர் பெண்அதிகாரி ஒருவரும், விலை உயர்ந்த கல்லின் பெயர் கொண்ட ஓர் உயர் அதிகாரியும், தினமலருக்கு போன் செய்து சன் டி.வி. மீது எழுத்து மூலம் புகார்தரச் சொல்லி அழுத்தியிருக்கிறார்கள்.
இதுபற்றி கோட்டை வட்டார உயர்அதிகாரி ஒருவர் நம்மிடம் பேசியபோது, ``வழக்கத்துக்கு மாறாக, இந்த சன் டி.வி. பிரச்னைக்காக பல்வேறு அதிகாரிகள் பல மணிநேரம் கோட்டையில் ஆலோசனை(!) நடத்தினார்கள். அப்போது சன் டி.வி. மீது கலைஞருக்கு இருக்கும் கடும்கோபம் பற்றி அதில் அலசப்பட்டது. கலைஞர் அண்மைக் காலமாக சன் செய்திகளையே பார்ப்பதில்லை என்ற தகவல்கூட அதில் பரிமாறப்பட்டது. `தினமலர் விவகாரத்தில் அந்த டி.வி.யின் போக்கு சற்று ஓவராகவே இருப்பதால், அவர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுத்து உள்ளே தள்ளுங்கள்' என்று கலைஞர் கூறிய தகவலும் அந்த ஆலோசனையில் அலசப்பட்டது. அப்படி ஆலோசித்தபின் அந்த அதிகாரிகள் தினமலர் செய்தி ஆசிரியர் பார்த்திபனிடம் எழுத்துமூலம் புகார் வாங்கக் கோரி போலீஸ் தரப்பிடமும் வற்புறுத்தினார்கள்'' என்றார் அந்த அதிகாரி.
அதன்படி தினமலர் செய்தி ஆசிரியர் பார்த்திபன் சென்னை நகர போலீஸ் கமிஷனர் சேகரிடம் வந்து எழுத்து மூலம் ஒரு புகார் அளித்திருக்கிறார். அந்தப் புகாரில் குறிப்பிட்ட எந்த சட்டப்பிரிவின் கீழும் வழக்குத் தொடுக்க வழியிருக்காது என்பதால், புகாரில் புதிதாக சில வரிகளைச் சேர்க்குமாறு கமிஷனர் அலுவலகத் தரப்பு பார்த்திபனிடம் சொல்லியிருக்கிறது. உடனே பார்த்திபன் அவரது நிர்வாகத்திடம் இதுபற்றிக் கேட்டு சில வரிகளை புதிதாகச் சேர்த்து புகார் எழுதித் தந்திருக்கிறார். அதையடுத்து, சன் டி.வி.மீது இ.பி.கோ. 153 ஏ, (இரு பிரிவினரிடையே மோதலை உண்டாக்கி பொது அமைதிக்குப் பங்கம் விளைவிப்பது) மற்றும் 505-2 (செய்தி மூலம் அவதூறு பரப்பி மோதலை உண்டாக்குவது) என்ற இரு பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருக்கிறது. அந்தப் புகார் மனு அதன்பின் மத்தியக் குற்றப்பிரிவிடம் விசாரணைக்கு ஒப்படைக்கப்பட்டது.
இதுபோன்ற அவதூறு செய்திகள் தொடர்பாக சன் டி.வி.யில் யார்மீது வழக்குத் தொடரலாம் என மத்தியக் குற்றப்பிரிவு அதிகாரிகள் யோசித்தபோது, அவர்கள் மனதில் பளிச்சென தோன்றிய பெயர் ராஜா. தி.மு.க. தரப்பு கலைஞர் டி.வி.யை ஆரம்பித்தபோது, அதற்கு மறைமுகமாக பல முட்டுக்கட்டைகளைப் போட்டவர் சன் டி.வி.யின் செய்தி ஆசிரியர் ராஜாதான் என்ற எண்ணம் தி.மு.க. தரப்பில் சிலரிடம் இருந்திருக்கிறது. அதிலும் கலைஞருக்கு சன் டி.வி. ராஜாவின் போக்கு கட்டோடு பிடிக்காது என்பது சில அதிகாரிகளுக்குத் தெரிந்திருந்த நிலையில், மேற்படி அவதூறு செய்திக்கு அவர்தான் பொறுப்பாளி என்ற ஒரு முடிவு எட்டப்பட்டு இருக்கிறது. அதன் அடிப்படையில் ராஜாவுக்கு சம்மன் அனுப்பியது மத்தியக் குற்றப்பிரிவு.
இதை எப்படியோ சன் டி.வி. நிருபர்கள் மூலம் தெரிந்து கொண்டு அலர்ட் ஆன ராஜா, செல்போனை ஆஃப் செய்து விட்டு உடனே அந்தர்தியானமானார். அவரை போலீஸார் பிடித்து சிந்தாதிரிப்பேட்டை ஸ்டேஷனில் வைத்து விசாரிப்பதாக புரளி ஏற்பட்டு, ஒருபுறம் பரபரப்பைக் கிளப்ப, மறுபுறம் கோபாலபுரத்தில் உள்ள முரசொலி மாறன் வீட்டில் பதுங்கி இருந்தாராம் ராஜா. ஒருநாள் பகல் முழுவதும் அங்கிருந்த அவரை அதன்பிறகு சிறப்பு விமானம் மூலம் வெளிநாட்டுக்கு அனுப்பவும் ஏற்பாடு நடந்ததாம்.
அதேசமயம், இந்த வழக்கை எப்படிச் சமாளிக்கலாம் என யோசித்த சன் டி.வி., ``எங்கள் செய்திகளுக்கு ராஜா பொறுப்பாளர் இல்லை. சன் டி.வி.யின் தலைமை நிர்வாக ஆசிரியர் முரசொலி செல்வம்தான் பொறுப்பாளர்'' என்று புதிதாக ஒரு காயை நகர்த்தியது. முரசொலி செல்வம், முதல்வரின் மனசாட்சியான மாறனின் தம்பி என்பதுடன் அவர் கலைஞரின் மகளான செல்வியின் கணவர். கூடவே கலைஞரால் அவர் தூக்கி வளர்க்கப்பட்டவர் என்பதால், இனிமேல் இந்தப் பிரச்னை அப்படியே ஆஃப் ஆகிவிடும் என்ற எதிர்பார்ப்பு சன் டி.வி. தரப்பிடம் இருந்திருக்கிறது.
ஆனால் என்ன ஆச்சரியம்? இந்தத் தகவல் கலைஞரின் காதுகளுக்கு அதிகாரிகள் மூலம் எட்டியபோது, அவர் அலட்டிக் கொள்ளவே இல்லையாம். ``யாராக இருந்தால் என்ன? சட்ட ரீதியாக என்ன நடவடிக்கை எடுக்க வேண்டுமோ அதை எடுங்கள்'' என்று கிரீன் சிக்னல் காட்டியிருக்கிறார் கலைஞர். அதையடுத்து வரும் 15_ம் தேதி முரசொலி செல்வம் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று சன் டி.வி. அலுவலகத்துக்கு சம்மன் அனுப்பியது மத்தியக் குற்றப்பிரிவு. இதைக் கொஞ்சமும் எதிர்பார்க்காத சன் டி.வி. தரப்பும் ஆடிப் போனதாகக் கேள்வி.தற்போது பெங்களூருவில் வகிக்கும் முரசொலி செல்வம் விசாரணைக்காக சென்னை வருவாரா? என்ற கேள்வியை அவரது தரப்பிடம் நாம் கேட்டோம்.
``முரசொலி செல்வம் 15-ம் தேதியளவில் சென்னைக்கு வருவது உறுதி. ஆனால் விசாரணையில் ஆஜராக அவர் வரவில்லை. முரசொலி செல்வத்திடம் இருந்து அவர்கள் என்ன தெரிந்து கொள்ள விரும்புகிறார்களோ, அதை எழுத்துமூலமாகக் கேட்டால் முரசொலி செல்வம் அதற்குப் பதிலளிக்கத் தயார். அதையும் மீறி இந்தப் பிரச்னைக்காக அவரைக் கைது செய்ய முயன்றால், அனைந்திந்திய அளவில் அதை பிரச்னையாக்கி விடுவதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். இதையும் தாண்டி முரசொலி செல்வத்தை கூண்டில் ஏற்றினாலும் நாங்கள் அலட்டிக் கொள்ளப் போவதில்லை. காரணம், ஏற்கெனவே கலைஞருக்காக சட்டமன்றக் கூண்டில் ஏறியவர்தான் முரசொலி செல்வம்'' என்றனர் அவர்கள்.
போலீஸார் கேட்க விரும்பும் கேள்விகளை எழுத்துப் பூர்வமாகக் கேட்டால் அதற்குப் பதிலளிக்கத் தயார் என்று முரசொலி செல்வம் தரப்பு கூறியிருப்பதற்கு வேறொரு பின்னணியும் இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்த கேள்விகளைத் தயாரிக்க போலீஸாருக்கு சிறிது கால அவகாசம் கண்டிப்பாகத் தேவைப்படும். அந்தக் கால அவகாசத்துக்காகவே முரசொலி செல்வம் தரப்பு இப்படியொரு கோரிக்கையை முன்வைக்கப் பார்க்கிறது என்கிறார்கள் வேறுசிலர்.
இதற்கிடையே விவகாரம் முரசொலி செல்வத்தின் மீது திரும்பியதை அடுத்து அவரது மனைவி செல்வி இண்டொருநாளில் சென்னை வந்து கலைஞரைச் சந்திப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கெனவே கோபாலபுரம் குடும்பத்தில் நிலவிய மனக்கசப்பு காரணமாக மிக மோசமான ஒரு முடிவை எடுத்ததாகக் கூறப்படும் செல்வி, இப்போது தன் கணவருக்காக எப்படி ரியாக்ட் செய்யப் போகிறார்? என்ற எதிர்பார்ப்பும் பல்வேறு தரப்பினரிடம் நிலவுகிறது. இதற்கிடையே பிரச்னை அப்படியே இனி அணைந்து போகும் என்ற கருத்தும் பலரிடம் நிலவுகிறது.
எப்படியோ? தங்கள் தலைக்கு வந்த பிரச்னையை இப்போது சாமர்த்தியமாக வேறு திசைக்குத் திருப்பியிருக்கிறது சன் டி.வி. தரப்பு. இதன்மூலம் கலைஞருக்கே செக் வைத்திருக்கிறார்கள் மாறன் சகோதரர்கள். இந்த ஆட்டத்தின் அடுத்த காயை யார்? எப்படி? நகர்த்தப் போகிறார்கள் என்பதுதான் கேள்வி.

1 கருத்து:

பெயரில்லா சொன்னது…

என்னமோ நடக்குது